Monday 15 June 2020

''இருப்பதைக் கொண்டு.....''

''இருப்பதைக் கொண்டு.....''

உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான மகிழ்ச்சியை அடைவதே ஆகும். மகிழ்ச்சி என்பது நமது மனதின் ஒரு நிலை தான். 

அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தான் உண்மை. 

போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும் இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்  பெறுகிறார்கள்.

சில நேரம் நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி தேவைக்கு அதிகமாகவே கவலைப்படுகின்றோம்..

நமக்கு கிடைத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நல்லவைகளுக்காக, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு நலத்தோடும், நீண்ட ஆயுளுடனும், வாழ்ந்ததற்காக மகிழ்ச்சியடைந்தாலே இன்னமும் ஆனந்தமும், உடல் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வோம்..

பணம், சொத்து நமக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே கொடுக்கும். 

நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைவதும், இல்லாததை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்..

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார்..

21.12.1875 முதல் 04.08.1997 வரை வாழ்ந்தார். தனது கடைசி 12 ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே வாழ்ந்தார்..

இறுதி 5 ஆண்டுகள் அவருக்கு காது கேட்கவில்லை. பார்வையும் குறைந்து விட்டது..

ஆனாலும் இறுதி வரை மகிழ்சியாகவே வாழ்ந்து வந்து இருக்கிறார்..

இவரது மகளும், மகனும், பேரனும் கூட இவருக்கு முன்னால் காலமாகி விட்டார்கள்.

இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்கு அவர் கூறியது,
"நான் எப்போதும் எதற்காகவும், பெரிதாக ஆசை கொள்ள மாட்டேன். என்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து மன நிறைவு கொள்வேன் மற்றும் என்னிடம் இல்லாதைப் பற்றி எந்த சூழலிலும்  கவலைப்பட்டதே இல்லை என்று சொன்னாராம்.."

`உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!’ என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லிச் சென்று  இருக்கிறார். 

எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட, எது இருக்கிறதோ அதை நினைத்து ஆனந்தப்பட்டு அதை வைத்து நிம்மதியான வாழ்க்கை வாழலாம்!

ஆம்., நண்பர்களே..,

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நம்மிடம் என்ன உள்ளதோ, அதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும். இல்லாதவற்றை எண்ணிக் கவலை கொள்ளக் கூடாது. 

இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். ஒரு முறை கடைபிடித்து தான் பாருங்களேன்..✍️🌹

இனிய காலை வணக்கம் !!!!

No comments:

Post a Comment